பன்னீர் செல்வம் வழக்கு- சட்டத்திற்குப் புறம்பான செயல்களிலிருந்து விலகியிருப்பீர்- இளைஞர்களுக்கு பாப்பாராய்டு வேண்டுகோள்

கோலாலம்பூர், பிப்.20

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மலேசிய இளைஞரான பன்னீர் செல்வம் பரந்தாமனின் நிலையை நாட்டிலுள்ள இளைஞர்கள் படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வலியுறுத்தினார்.

தெரிந்தோ தெரியாமலோ செய்யக்கூடிய இத்தகைய குற்றச் செயல்கள் தங்களை மரணத்தின் விளம்புக்கே கொண்டுச் செல்வதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தையும் நிர்க்கதியாக்கிவிடும் என்பதையும் அவர்கள் உணர வேண்டும் என அவர் கூறினார்.

தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் மீது பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதன் மூலமாகவும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் பெரும் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையை அமலாக்கத் தரப்பினர் வலுப்படுத்துவதன் வாயிலாவும் இளம் தலைமுறையினர் போதைப் பித்தர்களாகவும் போதைப் பொருள் விநியோகிப்பாளர்களாகவும் மாறி எதிர்காலத்தை சீரழித்து விடும் அபாயத்தை தடுக்க முடியும் என்றார் பாப்பாராய்டு.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பெரும் முதலைகள் தப்பித்துக் கொள்ளும் வேளையில் பன்னீர் செல்வம் போன்ற சிறு நெத்திலிகள் மட்டுமே சட்டத்தின் வலையில் சிக்கிக் கொள்கின்றன.

போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் மூளையாகச் செயல்படுவோரைத் துடைத்தொழித்தால் மட்டுமே நாட்டின் எதிர்காலச் சொத்தாக விளங்கும் இளைஞர்களை போதைப்பொருள் அபாயத்திலிருந்து காப்பாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டு நீதிபதியின் விவேகத்திற்கு உட்பட்டு தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டதை பாப்பராய்டு சுட்டிக்காட்டினார்.

எனினும், சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்ந்து இத்தகைய குற்றங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்டு இருப்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS