பெட்டாலிங் ஜெயா, பிப்.20-
தன்னை சந்திப்பதற்கு ஆர்வப்பட்ட வெளிநாட்டுத் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, எந்தெந்த தலைவர்கள் தடுக்கப்பட்டார்கள் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரதமரின் அரசியல் செயலாளர் முகமட் காமீல் அப்துல் முனிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளிநாட்டுத் தலைவர்களை உண்மையிலேயே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தடுத்து இருப்பாரேயானால் துன் மகாதீர், அந்த தலைவர்களின் பெயர்களை அம்பலப்படுத்துவது மூலமே அவரின் குற்றச்சாட்டு வலுப்பெறுமே தவிர வெறுமனே வெளிநாட்டுத் தலைவர்கள் என்று கூறி மழுப்பக்கூடாது என்று முகமட் காமீல் வலியுறுத்தியிருந்தார்.
மலேசியாவிற்கு வந்திருந்த வெளிநாட்டுத் தலைவர்கள் தம்மை சந்திப்பதற்கு ஆர்வப்பட்டதாகவும் ஆனால், தம்மை சந்திக்க வேண்டாம் என்று கூறி, டத்தோஸ்ரீ அன்வார் தடுத்ததாக துன் மகாதீர் நேற்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில் மக்களின் அனுதாபத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற மலிவான விளம்பரத்தைத் தேட துன் மகாதீர் முயற்கிக்கிறார் என்று முகமட் காமீல் குறிப்பிட்டு இருந்தார்.