பன்னீர் செல்வம் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைப்பு – கடைசி நேரத்தில் அதிரடி முடிவு

கோலாலம்பூர், பிப்.20-

இன்று பிப்ரவரி 20 ஆம் தேதி வியாழக்கிழமை, வைகறை நேரத்தில் சிங்கப்பூர், சாங்கிச் சிறைச்சாலையில் தூக்கிலிடப்படுவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்த ஒரு மலேசியப் பிரஜையான பன்னீர் செல்வம் பரந்தாமனின் தூக்குத் தண்டனை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக 37 வயது பன்னீர் செல்வம் இன்று அதிகாலை 5 மணியளவில் தூக்கு மேடைக்கு கொண்டு செல்வதற்கு வகை செய்யப்பட்டிருந்த வேளையில் அந்த மலேசியப் பிரஜையின் தூக்குத் தண்டனையை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பன்னீர் செல்வத்தின் தூக்குத் தண்டனையை ஒத்திவைப்பதற்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு நேற்றிரவு, பன்னீர் செல்வத்தின் குடும்பத்தினருக்கு, சாங்கி சிறைச்சாலை இலாகா தெரிவித்துள்ளதாக Lawyers For Liberty அமைப்பின் ஆலோசகர் என். சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

பன்னீர் செல்வத்திற்கு எதிரான தூக்குத்தண்டனை நிறைவேற்றத்திற்கு முன்னதாக இரண்டு முக்கிய கேள்விகளுக்கு விடை காண வேண்டும் என்று சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கடும் வாக்குவாதம், அந்த மலேசியப் பிரஜைக்கு பிறப்பிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஒத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை உயர் நீதிமன்றத்திற்கு ஏற்பட்டது.

அந்த இரண்டு முக்கிய விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கு வழிவிடும் வகையில் பன்னீர் செல்வம் தூக்குத் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தடாலடியாக எடுத்த முடிவு, தூக்கு கயிற்றில் ஊசலாடிக் கொண்டு இருந்த அந்த மலேசிய இளைஞரின் உயிர் தற்காலிகாக காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த செய்தி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிப்பதாக வழக்கறிஞர் சுரேந்தின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS