கோலாலம்பூர், பிப்.20-
சர்ச்சைக்குரிய சமயப் போதகர் சாகீர் நாயிக், நாட்டில் சொற்பொழிவு ஆற்றுவதற்கு இனி தடை ஏதுமில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.
சாகீர் நாயிக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உள்துறை அமைச்சு மீட்டுக்கொண்டு விட்டதாக இன்று நாடாளுமன்றத்தில் சைபுடீன் குறிப்பிட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் சாகீர் நாயிக் நிகழ்த்திய சொற்பொழிவில் வெளியிட்ட இரண்டு அறிக்கைக்காக அவர் சொற்பொழிவு ஆற்றுவதற்கு உள்துறை அமைச்சு தடை விதித்து இருந்ததாக சைபுடீன் விளக்கினார்.
அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் அந்த சமயப் போதகருக்கு உள்துறை அமைச்சு விதித்து இருந்த தடை மீட்டுக்கொள்ளப்பட்டு விட்டது. அவருக்கு எதிரான தடை தற்போது அமலில் இல்லை என்று அமைச்சர் சைபுடீன் விளக்கினார்.
மலேசியாவில் வசிப்பிட அந்தஸ்தை பெற்றுள்ள சாகீர் நாயிக், பொதுவில் சொற்பொழிவாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த வேளையில் பெர்லிஸில் நடைபெற்ற நிகழ்வில் அந்த சர்ச்சைக்குரிய சமயப் போதகர் உரை நிகழ்த்தியதாக அறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாகீர் நாயிக்கிற்கு விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டுவிட்டதா? என்று பக்காத்தான் ஹராப்பான் ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சைபுடீன் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.