கிள்ளான், பிப்.20-
TR Gang என்று முத்திரை குத்தப்பட்டு, சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 கைதிகள், இன்று கிள்ளான் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
அவர்களுக்கு எதிரான விசாரணை தொடர்பில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட 32 கைதிகள், சிறைச்சாலையில் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த காலகட்டத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டதாக நீதிபதியிடம் நேரடியாக புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தடுப்புக்காவலில் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கைதிகள் தாக்கப்பட்டால் போலீசில் புகார் செய்யும்படி நீதிபதி நோர்லீசா ஒத்மான் உத்தரவிட்டு இருப்பதாக அந்த 32 சொஸ்மா கைதிகளில் 15 பேரை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் தி. ஹார்பால் சிங் தெரிவித்தார்.
திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக சந்தேகத்தின் பேரில் இந்த 32 பேரும் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை தேதியை நிர்ணயிப்பதற்காக கிள்ளான் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நிறுத்தப்பட்டனர்.
முன்னதாக, சிறைச்சாலையில் தாங்கள் தாக்கப்பட்டதற்காக சொஸ்மா கைதிகள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதைதையும் நீதிபதியின் மேலார்ந்த கவனத்திற்கு வழக்கறிஞர் ஹர்பால் சிங் கொண்டு வந்தார்.