வன விலங்குகளுக்கான ‘வன்தாரா’; தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஆமதாபாத், மார்ச்.04-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி’வன்தாரா’ என்ற பெயரில் குஜராத் ஜாம் நகரில் அமைக்கப்பட்டுள்ள வன விலங்குகள் மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தைத் திறந்து வைத்தார். குஜராத் மாநிலம் ஜாம் நகரில் ‘வன்தாரா’ என்ற பெயரில் வன விலங்குகள் மீட்பு, மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பில் ஆனந்த் அம்பானி இந்த மையத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி, அவர்களது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் மருமகள் ராதிகா ஆகியோரும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். சிங்கக் குட்டிகள், ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகளுக்கு பிரதமர் மோடி உணவளித்து மகிழ்ந்தார். அவர் வன்தாராவில் உள்ள வனவிலங்கு மருத்துவமனையையும் பார்வையிட்டார்.

வன்தாரா மையம், ஜாம்நகர் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு மைய வளாகத்தில் 3 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு 43 வகை உயிரினங்களில், 2 ஆயிரம் வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இயற்கையான வன விலங்குகள் வாழ்விடம் போன்று இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனந்த் அம்பானியின் கனவுத் திட்டமான ‘வன்தாரா’வில், வன உயிரியல் நிபுணர்கள் உட்பட 2,100 பேர் பணியாற்றுகின்றனர். விலங்குகள் நலத்தை பாதுகாக்கும் அதே வேளையில், வன விலங்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் இந்த மையம் ஏற்படுத்தி வருகிறது.

WATCH OUR LATEST NEWS