கோல சிலாங்கூர் பிகேஆர் கூட்டத்தில் அமளி – ஆடவர் கைது

கோல சிலாங்கூர், மார்ச்.05-

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிகேஆர் கட்சியின் கோல சிலாங்கூர் தொகுதி ஆண்டுக் கூட்டத்தில் பெரும் அமளியில் முடிந்ததைத் தொடர்ந்து கட்சி உறுப்பினர் என்று நம்பப்படும் பெண் ஒருவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதுடைய அந்த நபர், கடந்த திங்கட்கிழமை மாலை 4.15 மணியளவில் கோல சிலாங்கூர் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் அஷாருடின் தஜுடின் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கோல சிலாங்கூர் பிகேஆர் தொகுதி ஆண்டுக் கூட்டத்தில் பெரும் வாக்குவாதமும், அமளி துமளியும் ஏற்பட்டது குறித்து சித்தரிக்கும் காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பாராங்கை எடுத்து வந்து வெட்டப் போவதாக சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் அந்த நபர், குண்டர் கும்பலுடன் தொடர்பில் உள்ளவரா? என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அஷாருடின் தஜுடின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS