தாசெக் குளுகோர், மார்ச்.07-
பினாங்கு, தாசேக் குளுகோர், தாமான் செப்பாடு ஜெயாவில் உள்ள நாசி கண்டார் உணவகத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மியன்மார் பிரஜை ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பில் 4 சந்தேகப் பேர்வழிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்த நாசி கண்டார் உணவகத்தின் நிர்வாகியான 38 வயதுடைய அந்த மியன்மார் பிரஜையை , வெட்டுக் கத்தியை ஆயுதமாகக் கொண்ட முகமூடி கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் உள்ளூரைச் சேர்ந்த நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு ஆளான அந்த மியன்மார் பிரஜை உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்த போது அந்த கும்பல் துரத்திச் சென்று வெட்டிக் கொன்றதாக பூர்வாங்க புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஏசிபி அனுவார் குறிப்பிட்டார்.