கிள்ளான், மார்ச்.07-
கிள்ளான், மேரு தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள உலோகக் கழிவுகளைப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கடல்சார் போலீசார், 33 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 12. 3 லட்சம் கிலோ மின்கழிவுகளைப் பறிமுதல் செய்தனர்.
சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து காலை 11.00 மணிக்கு நடத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த சோதனையில் 30 வயது உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதன் கமாண்டர் உதவி ஆணையர் ருஸ்லி சீ ஆரி கூறினார்.
அந்த தொழிற்சாலை, பழைய உலோகப் பொருள்களைப் பதப்படுத்தும் உரிமத்தை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் மின் கழிவுகளைப் பதப்படுத்தும் அனுமதி அதனிடம் இல்லை என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்த வளாகத்தை ஆய்வு செய்த போது 2005ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தர விதிமுறைகளின் கீழ் அட்டவணையிடப்பட்ட கழிவுகள் என அவை வகைப்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.