கோல தாஹானில் மலையேறும் நடவடிக்கையில் டச்சுப் பெண் உயிரிழந்தார்

குவாந்தான், ஏப்ரல்.05-

கடந்த வியாழக்கிழமை, பகாங், ஜெராந்துட், கோல தாஹான், குவா கெபாயாங் வனப்பகுதியில் மலையேறும் நடவடிக்கையில் தனது குழுவினருடன் ஈடுபட்ட டச்சுப் பெண்மணி ஒருவர் உயிரிழந்தார்.

34 வயதுடைய Pommelien Cathanrina Maria என்ற அந்தப் பெண்மணி மரணம் குறித்து நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 12.26 மணியளவில் தெரிவிக்கப்பட்டது என்று பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் முகமட் ராஸாம் தாஜா ரஹீம் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேலும் 15 பேரும், இரண்டு வழிகாட்டிகளின் உதவியுடன் கோல கெனியாமிற்குச் சென்று, பின்னர் குவா கெபாயாங் பெசார் பயணத்தைத் தொடர்வதற்கு வியாழக்கிழமை இரவு, தங்கிய போது இரவு 7 மணியளவில் அந்த அந்நிய நாட்டுப் பெண் சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது.

மலையேறும் குழுவைச் சேர்ந்த 13 பேர் உதவ முற்பட்ட நிலையில், அந்தப் பெண் மரணமுற்றதாக தெரியவந்தது. மறுநாள் தகவல் கிடைத்து தீயணைப்பு, மீட்புப்படையினர், வனவிலங்கு, தேசியப் பூங்காவினர், பொது தற்காப்புப் படையினர் மற்றும் போலீசார், அந்தப் பெண்ணின் சடலத்தைக் கொண்டு வருவதற்குச் சென்றனர்.

எனினும் சடலத்தை மலையடிவாரத்திற்குக் கொண்டு வருவதில் மீட்புப் படையினர் சிரமத்தை எதிர் நோக்கியதால் தீயணைப்பு, மீட்புப் படையினருக்குச் சொந்தமான சுபாங்கில் உள்ள ஹெலிகாப்டர் சேவைப் பிரிவின் உதவி நாடப்பட்டது.

இன்று காலை 10.23 மணியளவில் சுபாங்கிலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், இன்று மதியம் அவ்விடத்தை அடைந்து , அந்தப் பெண்ணின் உடல் ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு, ஜெராந்துட் திடலுக்குக் கொண்டு வரப்பட்டதாக முகமட் ராஸாம் தாஜா தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS