மன்னிப்புக் கோரினார் சமூக ஊடகப் பிரபலம்

ஈப்போ, ஏப்ரல்.05-

பேரா மாநிலத்தில் உள்ள ஒரு சீனப் பள்ளியில் மாணவர்கள் தேசியக் கீதத்தை, சீனமொழியில் பாடியதாகத் தவறாகக் குற்றஞ்சாட்டி, சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்ததற்காக சமூக ஊடகப் பிரபலமான ஷாருல் ஏமா ரேனா அபு சாமா இன்று பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

எனினும் தம்முடைய இந்த குற்றச்சாட்டை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த அடுத்த 10 நிமிடத்திலேயே அதனைத் தாம் அகற்றிவிட்டதாக ரத்து நாகா என்று சுருங்க அழைக்கப்படும் அவர் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

பேராக் மாநில கீதத்தைத் தாம் கேலி செய்ததாகக் கூறி, சைபர்டுரூப்பர் சிலர், தவறாக நினைத்து, தமக்கு எதிராகச் சமூக ஊடகங்களில் தாக்குதல் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் தனது பதிவேற்றத்தில் அது பேரா மாநில கீதம் என்பதைத் தாம் குறிப்பிடவில்லை என்று அந்த சமூக ஊடகப் பிரபலம் விளக்கம் அளித்துள்ளார்.

சீனப் பள்ளி மாணவர்கள் தேசிய கீதத்தை, சீனமொழியில் பாடி அவமதித்ததாக ஷாருல் ஏமா குற்றம் சாட்டிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் நேற்று வெள்ளிக்கிழமை பரவலாக வைரலானது.

தெலுக் இந்தான் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினரும் டிஏபி இளைஞர் பிரிவுத் தலைவருமான வூ கா லியோங், கலந்து கொண்ட சீனப்பள்ளி நிகழ்வில் சீன மாணவர்கள் பாடியதாக வீடியோவை வெளியிட்டு, அந்த பெண் குற்றஞ்சாட்டியிருந்தார்.

சம்பந்தப்பட்ட பெண்மணியின் இந்த செயலுக்கு வலைவாசிகள் பலர் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

WATCH OUR LATEST NEWS