மத்தியப் பிரதேசம், ஏப்ரல்.05-
இந்தியா, மத்தியப் பிரதேசத்தில் இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டரால் ஒரே மாதத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். ஜான் கெம் எனும் அந்த மருத்துவர் மருத்துவமனையொன்றில் இதய அறுவை சிகிச்சை செய்து வந்துள்ளார். பிரிட்டனை சேர்ந்தவர் என அவர் கூறி வந்துள்ளார். இவர், பலருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர்களில் ஏழு பேர் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டது.
இது குறித்து தொடர்ந்து புகார்கள் வரவே, அந்த மருத்துவமனையில் மாவட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், அறுவை சிகிச்சை செய்தது போலி டாக்டர் என்பது தெரியவந்தது. அவரின் உண்மையான பெயர் நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், மருத்துவமனையில் சோதனை செய்து முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். பிரிட்டனில் உள்ள டாக்டரைப் போன்றே போலி ஆவணங்களை அவர் தயார் செய்ததும், போலி டாக்டர் மீது ஐதராபாத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதும், அவர் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.