இரவு நேர கேளிக்கை விடுதி மேற்கூரை சரிந்தது, 80 க்கும் மேற்பட்டோர் பலி – டொமினிகன் குடியிரசில் பரபரப்பு

சந்தோ டோமிங்கோ, ஏப்ரல்.09-

கரீபியன் தீவு நாடான டொமினிகன் (டொமினிகன் குடியரசு தலைநகரான Santo Domingo- வில் உள்ள பிரபல இரவுநேர கேளிக்கை விடுதி மேற்கூரை, எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததில் 80 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட் செட் நைட்கிளப் என்ற அந்த கேளிக்கை விடுதியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்க, மீட்புப் பணியாளர்கள் தீவிரமாகத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து நடந்த இரவுநேர கேளிக்கை விடுதியில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உட்பட சில புகழ்பெற்ற நபர்களும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கக்கூடிய உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்புப்பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு, வருகின்றனர்.

டொமினிகன் குடியரசின் பிரபல பாடகர் ரூபி பேரெஸ், இடிபாடுகளில் சிக்கிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது. 69 வயதுடைய அந்த மூத்த பாடகர், சம்பவம் நிகழும் போது அந்த கிளப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவசர கால செயல்பாட்டு மையத்தின் இயக்குனர் Juan Manuel Mendez கூறுகையில், பல்வேறு மருத்துவமனைகளுக்கு 134 ஆம்புலன்ஸ்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த பயங்கரமான கூரை சரிவுக்கானக் காரணம் தற்போது வரை கண்டறியப்படவில்லை. கட்டிடத்தின் கூரை கட்டமைப்பு சரிந்ததற்கானக் காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

WATCH OUR LATEST NEWS