ஶ்ரீ சிவசக்தி ஆரியம்மன் திருக்கோயிலின் மாபெரும் குடமுழக்கு விழா

ஷா ஆலாம், ஏப்ரல்.13-

சிலாங்கூர், ஷா ஆலாம் செக்‌ஷன் U 5 இல் வீற்றிருக்கும் ஶ்ரீ சிவசக்தி ஆரியம்மன் திருக்கோயிலின் மாபெரும் குடமுழக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த பக்தித் திருவிழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மலேசிய இந்துக் கோயில்கள், இந்து அமைப்புகள் பேரவை மஹிமாவின் தலைவர் டத்தோ சிவக்குமார், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் வீரமான், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், கோத்தா டாமான்சாரா சட்டமன்ற உறுப்பினர் துவான் முகமட் இஸுவான் பின் அஹ்மாட் காசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த மாபெரும் குடமுழக்கு விழா காலை 5.00 மணிக்குத் தொடங்கியது. காலை 8.15 மணியளவில் சுந்தர விமானத்திற்கும், பரிவார விமானங்களுக்கும் திருக்குடமுழக்கு நடைபெற்றது. ரதனைத் தொடர்ந்து மூலவரான சிவ சக்தி அம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நன்னீராட்டு நடைபெற்றது.

வருகை புரிந்த பக்தர்கள் யாவரும் ஶ்ரீ சிவசக்தி அம்மனின் அருளும் ஆசியும் பெற்றதோடு நண்பகலில் நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர். இந்த திருவிழா சிறப்பாக நடைபெற ஆதரவாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இத்திருக்கோயிலின் தலைவர் கோபால் ஆறுமுகமும் செயலாளர் அருண் குமாரும் தங்களின் செயலவை சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS