கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் சுட்டுக் கொலை

பெலிஸ், ஏப்ரல்.18-

மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் சிறிய ரக பயணிகள் விமானத்தைக் கத்தி முனையில் கடத்திய நபரை, பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் சிறிய நகரில் இருந்து சுற்றுலாத் தலமான சான் பெட்ரோவுக்கு 14 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென கத்தி முனையில் ஒருவர் விமானத்தைக் கடத்தினார். தன்னை இந்த நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்று விடுமாறு கோரிக்கை விடுத்தார். இதனால், விமானத்தில் பதற்றம் நிலவியது.

அப்போது, சுதாரித்துக் கொண்ட பயணிகளில் ஒருவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியால், அந்த நபரை சுட்டுக் கொன்றார். அச்சம்பவத்தால் சுமார் 2 மணிநேரம் விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. பிறகு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விமானத்தை கடத்த முயன்றது அமெரிக்காவைச் சேர்ந்த அகின்யேலா சாவா டெய்லர் என்ற விவரம் தெரிய வந்தது. இந்த கடத்தல் சம்பவத்தின் போது, விமானி உள்பட 3 பேரை அவர் கத்தியால் குத்தியுள்ளார். அதன்பிறகு, சுற்றுலாப் பயணி ஒருவர் தம்மிடம் இருந்த் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால், அந்த நபரைச் சுட்டுக் கொன்றது தெரிய வந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS