தாக்குதலுக்கு நாங்கள் காரணமல்ல: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், ஏப்ரல்.24-

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குத் தாங்கள் காரணமல்ல என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இச்சம்பவத்திற்கு இந்திய தலைவர்கள் மட்டும் அல்லாமல் உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சும் ‘பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்’ எனக் கூறியிருந்தது.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை நாங்கள் நிராகரித்து உள்ளோம். இந்தியாவில் நாகலாந்து முதல் காஷ்மீர் வரையிலும், சத்தீஸ்கர், மணிப்பூர் மற்றும் தென் மாநிலங்களில் புரட்சி நடக்கிறது. இதில், வெளிநாட்டினர் பங்கு கிடையாது. உள்ளூரை சேர்ந்தவர்கள் காரணம் என அமைச்சு கூறியது தெரியவந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS