கோலாலம்பூர், ஏப்ரல்.27-
ஜெம்போல், செலாயாங், சீலாம், செம்போர்னா ஆகிய தொகுதிகளில் மே 1ஆம் தேதி பிகேஆர் கட்சி தேர்தலின் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மத்திய தேர்வுக் குழுவின் தலைவர் டாக்டர் ஸலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார். பெறப்பட்ட அதிருப்தி, எதிர்ப்பு குறித்து அக்குழு ஆய்வு செய்யும் என்றும், மே 5ஆம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கட்சியின் நேர்மைத் தன்மையை உறுதிச் செய்வதற்காக இந்த ஆய்வு செயல்முறை கவனமாகவும், நியாயமாகவும், விவேகமாகவும் மேற்கொள்ளப்படும். அதன் பிறகு தேசிய அளவிலான வாக்குப்பதிவு மே மாதம் தொடரும் என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போட்டியின்றி வெற்றி பெற்ற அல்லது நியாயமான, ஆட்சேபனைகள் இல்லாத கிளைகளின் தலைவர் பதவிகளையும், தேசிய மாநாட்டிற்கான நிகராளிகள் பட்டியலையும் அக்குழு மே 1ஆம் தேதி அறிவிக்கும் என்று ஸலிஹா தெரிவித்தார். இந்தப் பட்டியல் தேசிய மாநாடு, இளைஞர் மாநாடு, மகளிர் மாநாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து தயார் செய்வதற்காக பொதுச் செயலாளர் அலுவலகத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும். அனைத்து கட்சி உறுப்பினர்களும் அமைதியாக இருக்குமாறும், நடைபெற்று வரும் செயல்முறைக்கு நம்பிக்கை அளிக்குமாறும், கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.