கூலிம், ஏப்ரல்.28-
வீட்டின் பின்புறமாக சமையல் அறையில் நுழைந்த கொள்ளையன் ஒருவன், சமையல் கட்டில் இருந்த மூன்று இந்தியப் பெண்களை மடக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, தயார் நிலையில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த தனது சகாவுடன் தப்பிச் சென்றான்.
இந்தக் கொள்ளைச் சம்பவம், நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கெடா, கூலிம், தாமான் கோத்தா கெனாரியில் நிகழ்ந்தது. இதில் பார்வதி என்ற 39 வயது மாது கடும் காயங்களுக்கு ஆளானார்.
சங்கிலியைப் பறிக்க கொள்ளையனுடன் போராடிய போது, கீழே இழுத்துத் தள்ளப்பட்ட பார்வதிக்கு இரு முழங்காலிலும், கன்னத்திலும் காயம் ஏற்பட்டது.
தனது தாயார் மற்றும் தோழியுடன் சமையல் கட்டில் வேலை செய்து கொண்டு இருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸுல்கிப்ளி அஸிஸான் தெரிவித்தார்.
அந்த வீடமைப்புப் பகுதியில் இரு மருங்கிற்கு இடையில் பின்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இந்தியர்கள் என்று நம்பப்படும் இரண்டு வழிபறிக் கொள்ளையர்களில் ஒருவன், வெளியே மோட்டார் சைக்கிளில் காத்திருக்க, மற்றொருவன், கதவு திறந்திருந்த வீட்டின் சமையல் கட்டின் பின்வழியாக நுழைந்து இருக்கிறான்.
பார்வதியின் தோழி அணிந்திருந்த ஆபரணத்தைக் கத்தி முனையில் பறிக்க முயன்றுள்ளான். பார்வதி அதனைத் தடுத்துள்ளார். பின்னர் பார்வதியின் தலைமுடியைப் பிடித்த கொள்ளையன், அவரைத் தரதர வென்று இழுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளான்.
பார்வதியின் தாயாரும், தோழியும் அதனைத் தடுக்க வெளியே ஓடி வந்தனர். அப்போது பார்வதியைக் கீழே தள்ளிய கொள்ளையன், அந்த பெண்மணியின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முற்பட்டுள்ளான்.
போராட்டத்திற்கு மத்தியில், மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் காத்திருந்த அவனது சகா, மோட்டார் சைக்கிளுடன் அப்பகுதிக்குள் நுழைந்து, கொள்ளையனை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளான் என்று சுப்ரிண்டெண்டன் ஸுல்கிப்ளி அஸிஸான் தெரிவித்தார்.
எதிர் வரிசை வீட்டின் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆராய்ந்த போது, கொள்ளையர்கள் தலைக்கவசம் அணிந்திருந்ததால், அவர்களையும், கொள்ளைக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் துல்லியமாக அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது என்று ஸுல்கிப்ளி அஸிஸான் குறிப்பிட்டு இருந்தார்.
எனினும் இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்டுள்ள போலீஸ் புகாரைத் தொடர்ந்து தாங்கள் தீவிரமாகப் புலன் விசாரணை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.