ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.28-
பினாங்கில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் காணாமல் போன ஓர் ஆஸ்திரேலியப் பிரஜையான அன்னா ஜென்கின்ஸ் என்ற அன்னப்பூரணியின் எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்ட வழக்கில் மரண விசாரணை நீதிமன்றம் அளித்த வெளிப்படையான தீர்ப்பை பினாங்கு உயர் நீதிமன்றம் உறுதிச் செய்துள்ளது.
அன்னப்பூரணியின் மரணத்தைக் கொலையாக வகைப்படுத்துவதற்கு போதுமான, உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி ரோபிஃயா முகமட் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
ஆனால், அன்னப்பூரணி மரணம் தொடர்பில் விசாரணை தொடர வேண்டும் என்று நீதிபதி ரோபிஃயா கேட்டுக் கொண்டார்.
அன்னப்பூரணி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கு முன் வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. பேரா, பாரிட் புந்தாரில் பிறந்து வளர்ந்து, ஆஸ்திரேலிய பிரஜையாக மாறிய அன்னப்பூரணியின் மரணம் தொடர்பில் ஊகங்களில் அடிப்படையில் முடிவு செய்ய இயலாது.
கொலை என்பது மரண விசாரணை நீதிபதியால் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு கடும் குற்றச்சாட்டு. அன்னப்பூரணியின் மரணத்திற்கானக் காரணத்தை முடிவு செய்ய இயலவில்லை என்று மரண விசாரணை நீதிபதி அளித்த முடிவைத் தாம் ஆமோதிப்பதாக நீதிபதி ரோபிஃயா முகமட் தனது தீர்ப்பில் கூறினார்.
ஆஸ்திரேலியா, அடலேட்டில் வசித்து வந்த 65 வயது அன்னப்பூரணி, கடந்த 2017 ஆம் ஆண்டு தனது கணவர் பிஃரான்க் ஜென்கின்ஸுடன் பினாங்கைச் சுற்றிப் பார்க்க வந்த போது மர்மமான முறையில் காணாமல் போனார்.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவரின் எலும்புக் கூடு, ஒரு கட்டுமானத் தளத்தின் பங்களா வீட்டிற்கு அருகில் புதரில் கண்டு பிடிக்கப்பட்டது.