கிள்ளான், ஏப்ரல்.28-
தன்னை வம்புக்கு இழுத்த மோட்டார் சைக்கிளோட்டியை மோதித் தள்ளி காயம் விளைவித்த காரோட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு 10.20 மணியளவில் கிள்ளான், பண்டார் செந்தோசா, ஜாலான் டத்தோ யுசுஃப் ஷாபுடின் 28 இல் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி, சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அந்த காரோட்டி அடையாளம் காணப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்லி காசா தெரிவித்தார்.
இரு கால்களிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்த மோட்டார் சைக்கிளோட்டி, கிள்ளான் பெரிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் 37 வயதுடைய அந்த காரோட்டியை போலீசார் கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
50 வயது மோட்டார் சைக்கிளோட்டி, திடீரென்று வழித்தடத்தை மாற்றியதைத் தொடர்ந்து நிலைத் தடுமாறிப் போன காரோட்டி, மோட்டார் சைக்கிளோட்யை எச்சரிக்கும் வகையில் வேகமாக ஹார்ன் சத்தத்தை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியுற்ற அந்த மோட்டார் சைக்கிளோட்டி, அந்த காரைப் பின் தொடர்ந்து சென்று, காரின் கண்ணாடியைத் தலைக்கவசத்தால் அடித்து, அந்த காரோட்டியை வம்புக்கு இழுத்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த அந்தக் காரோட்டி, வாகனத்தைத் திருப்பி, அந்த மோட்டார் சைக்கிளோட்டியைப் பலவந்தமாக மோதியுள்ளார்.
மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த 50 வயதுடைய நபரை மீண்டும் மோதுவதற்கு அந்த காரோட்டி முயற்சி செய்த வேளையில் பொதுமக்கள் போட்ட சத்தத்தினால், காரோட்டி அவ்விடத்திலிருந்து புறப்பட்டதாக ஏசிபி ரம்லி காசா தெரிவித்தார்.
பொது மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து அந்த காரோட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.