பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி ராணுவத்தில் பணியாற்றியவரா?

புதுடெல்லி, ஏப்ரல்.29-

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியது தெரிய வந்துள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின், நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. 

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சுலைமான் என்ற ஹாஷிம் மூசா, தல்ஹா பாய் என்ற அலி பாய் ஆகிய 2 பாகிஸ்தானியர்கள் மற்றும் அப்துல் ஹுசைன் தோகர் என்ற ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவரின் வரைபடத்தையும் காவல்துறை வெளியிட்டது. 

இந்த நிலையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானை சேர்ந்த சுலைமான் என்கிற ஹாஷிம் மூசா, இதற்கு முன்னதாக பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் பின்னர், காஷ்மீரில் உள்ளூர்வாசிகள் அல்லாதவர்கள் மீதான தாக்குதலை முன்னெடுக்க, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்கு அனுப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் காஷ்மீரைச் சேர்ந்த 15 நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மூசாவின் ராணுவ பின்னணி உறுதிச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

பாகிஸ்தான் அரசு இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என மறுத்து வந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

WATCH OUR LATEST NEWS