ஶ்ரீநகர், மே.05-
இந்திய ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து தாக்கி அழித்துள்ளனர். அதோடு அங்கிருந்து 5 வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தற்போது தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தினர் கூட்டாக இணைந்து, பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் சுரன்கோட் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. அந்த இடத்தில் 5 வெடிகுண்டுகளும், 2 ரேடியோ செட்களும், 3 போர்வைகளும் கண்டெடுக்கப்பட்டன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. தொடர்ந்து பதினொரு நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கி வருகிறது.