கோலாலம்பூர், மே.06-
மலேசியாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் வணிகங்களைக் காப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூடுதல் கடனுதவித் திட்டங்கள் அறிவித்திருப்பதை இலக்கவில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வரவேற்றுள்ளார்.
குறிப்பாக உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் அண்மையில் அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மத்தியில், நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் SME எனப்படும் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் வர்த்தகத்தை காப்பதற்கும், அவற்றை வளப்படுத்துவதற்கும் பிரதமர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்று கோபிந்த் சிங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சவால் மிகுந்த சூழ்நிலைகளில் பாதிக்கப்படும் சிறிய – நடுத்தர வணிக நிறுவனங்கள் கடனுதவி பெறுவதை எளிதாக்க, வணிக நிதி உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 100 கோடி ரிங்கிட் கூடுதல் நிதி உதவியை அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிய – நடுத்தர வணிக நிறுவனங்களின் பணப் புழக்கத்தையும், அந்நிறுவனங்களின் நீடித்த செயல்பாடுகளை வலுப்படுத்த நிதி மேம்பாட்டு நிறுவனங்களின் வாயிலாக 50 கோடி ரிங்கிட் எளிய மற்றும் சிறிய கடனுதவிக்கான மற்றொரு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிர உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக MATRADE- டிற்கு 5 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் நிறுவனங்கள், கண்காட்சிகளில் பங்கேற்பதன் வாயிலாக அனைத்துலகச் சந்தைகளில் தங்களின் வணிகங்களை விரிவுப்படுத்திக் கொள்வதற்கு இந்த நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக கோபிந்த் சிங் சுட்டிக் காட்டினார்.
ஒட்டுமொத்தத்தில் அமெரிக்காவின் வரி விதிப்பால் நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையைச் சார்ந்த வணிகர்கள் நிலை குலையாமல் இருக்க அரசாங்கம் அதிரடியாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கோபிந்த் சிங் விளக்கினார்.