பாயான் லெப்பாஸ், மே.06-
பினாங்கில் உள்ள ஒரு பேரங்காடி வளாகத்தின் பல மாடிகளைக் கொண்ட கார் நிறுத்தும் இடத்திலிருந்து மாது ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை மதியம் 12.47 மணியளவில் நிகழ்ந்தது என்று பாலிக் புலாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.
அந்த பேரங்காடியின் ஏழாவது மாடியில் உள்ள கார் நிறுத்தும் இடத்திலிருந்து கீழே விழுவதற்கு முன்னதாக, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த தனது காரில், தனது தனிப்பட்ட உடமைகளை அந்த மாது கைவிட்டுச் சென்றுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் நிகழ்ந்த அன்று, அந்த மாது காலை 9 மணியளவில் வீட்டிலிருந்து தனியொரு நபராக காரில் புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அந்த பேரங்காடி கட்டட வளாகத்திற்கு வந்திருக்கிறார். ஆகக் கடைசியாக மதியம் 12 மணியளவில் தனது உறவினரைக் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மிக உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்ததால் உடலில் பலத்த காயங்களுக்கு ஆளாகிய அந்த மாது சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.