சாலை விபத்துகள் குறித்து சீரிய கவனம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்

ஷா ஆலாம், மே.15-

சாலை விபத்துகள் குறிப்பாக கனரக வாகனங்களை உட்படுத்துய சாலை விபத்துகள் குறித்து அரசாங்கம் சீரிய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராபுஃடின் இட்ரிஸ் ஷா தெரிவித்துள்ளார். அண்மைய காலமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரத்துவ தரப்புகள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பேரா, தெலுக் இந்தானில் மத்திய கலகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 9 FRU வீரர்கள் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். அத்தகைய சம்பவம் மீண்டும் மீண்டும் நிகழக்கூடாது என சுல்தான் சஹாராபுஃடின் கேட்டுக் கொண்டார். உயிரிழப்பு மற்றும் கடும் காயங்களை ஏற்படுத்தும் விபத்துக்குக் காரணமான தரப்புகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்பட வேண்டும். அதோடு வாகனமோட்டும் உரிமம் மீட்டுக் கொள்ளப்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, தெலுக் இந்தானில் கற்களை ஏற்றி வந்த லாரியுடன் மோதியதில் டிரக்கிலிருந்த FRU வீரர்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் சில வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS