பெட்டாலிங் ஜெயா, மே.18-
பிகேஆர் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், ரஃபிஸி ரம்லி மற்ற விவகாரங்களை விட பிகேஆர் தேர்தல் பரப்புரையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். சரவாக்கில் பிகேஆர் துணைத் தலைவர் பரப்புரையில், அரசாங்கத்திலும் கட்சியிலும் பதவிகள் இல்லை என்றால், தாம் மீண்டும் அந்த மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் போகலாம் என்று ரஃபிஸி கூறியிருந்தார். மே 23ஆம் தேதி பிகேஆர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொலைநோக்குப் பார்வையுடன் ரஃபிஸி தனது பரப்புரைக் காலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று சைஃபுடின் கூறினார்.
2013 முதல் 2018 வரை, சரவாக்கில் அப்போது ஆட்சி அமைத்திருந்த பாரிசான் நேஷனல் தலைமையின் கீழ் ரஃபிஸியும் பிற பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடை செய்தது. பிகேஆர் மத்திய அரசாங்கத்தை அமைத்தப் பிறகு அந்தத் தடை மறுஆய்வு செய்யப்பட்டது.