ஈப்போ, மே.19-
கடந்த வாரம் தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோர விபத்தில் 9 போலீஸ்காரர்களின் மரணத்திற்குக் காரணமானவர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட லோரி ஓட்டுநர், இன்று திங்கட்கிழமை காலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அடுத்த 20 நிமிடத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல், கற்பழிப்பு போன்ற பழைய குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளதாக கூறப்படும் 45 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், மாட்டைத் திருடியதாகக் குற்றச்சாட்டின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
9 போலீஸ்காரர்களுக்கு மரணம் விளைவித்ததாகக் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப்பட்ட அந்த லோரி ஓட்டுநரை ஜாமீனில் எடுப்பதற்கு யாரும் முன் வராததால் அவர் கடந்த மூன்று நாட்களாக பத்து காஜா போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.
இன்று 6 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் தொகைச் செலுத்தப்பட்டு, அந்த லோரி ஓட்டுநரை அவரின் முதலாளி மீட்ட வேளையில், அடுத்த 20 நிமிடத்தில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.