கோலாலம்பூர், மே.19-
ஆசியான் உச்ச நிலை மாநாட்டை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி, மே 28 ஆம் தேதி வரையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் 6 நெடுஞ்சாலைகள், 25 பிரதானச் சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ஐஏ, கேஎல்சிசி, இஸ்தானா நெகாரா உட்பட சில முன்னணி ஹோட்டல்கள் வீற்றிருக்கும் பிரதானச் சாலைகள் மூடப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவு இயக்குநர் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
கேஎல்ஐஏ விரைவுச் சாலை, வடக்கு தெற்கு விரைவுச் சாலையின் புத்ராஜெயா பகுதியான எலிட், கிள்ளான் பள்ளத்தாக்கின் புதிய நெடுஞ்சாலையான என்கேவியீயின் சுபாங்-ஜாலான் டூத்தா, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் சுங்கை பூலோ பகுதி, மெக்ஸ் எனப்படும் மாஜு எக்ஸ்பிரஸ்வே, கோலாலம்பூர்- சிரம்பான் நெடுஞ்சாலையின் சுங்கை பீசி பகுதி ஆகியவை அந்த நெடுஞ்சாலைகளில் அடங்கும் என்று யுஸ்ரி ஹசான் விளக்கினார்.