பிகேஆர் என்னுடைய குடும்பக் கட்சி என்று முத்திரைக் குத்துவதா? சாடினார் டத்தோஸ்ரீ அன்வார்

ஜோகூர் பாரு, மே.24-

பிகேஆர் கட்சி, தனது மனைவி மற்றும் மகளின் கட்சி என்று தனது குடும்பக் கட்சியாக முத்திரைக் குத்தி வரும் தரப்பினரைக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கடுமையாகச் சாடினார்.

நேற்று நடைபெற்ற கட்சித் தேர்தலில் தனது மகள் நூருல் இஸா, கட்சியின் புதியத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது மூலம், பிகேஆர் ஒரு குடும்பக் கட்சி என்று முத்திரைக் குத்துப்பட்டு, கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவதாக பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

பிகேஆர் இன்று வளர்ந்து விட்டது. அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருக்கிறது. அதன் தலைவர் நாட்டின் பிரதமராக இருக்கிறார் என்பதற்காக மனம் போன போக்கில், பிகேஆர் ஒரு குடும்பக் கட்சி என்று முத்திரை குத்த வேண்டாம் என்று டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.

அன்று நான், சிறையில் வைக்கப்பட்ட போது, அந்த நெருக்கடி மிகுந்த தருணங்களில் கட்சியை யார் வழிநடத்தியது? யார் கட்சியினை முன்னெடுத்துக் கொண்டுச் சென்றது? கட்சியைப் புத்துணர்ச்சியுடன் வழி நடத்தியது யார்? என்று டத்தோஸ்ரீ அன்வார் வினவினார்.

கெஅடிலான் நேஷனல் என்ற கட்சியை பிகேஆர் என்று பெயரிடப்பட்டு, அதன் வேகமும் தாக்கமும் குறையாமல் வழிநடத்தி வந்த கட்சியின் அன்றைய தலைவரும், தனது துணைவியாருமான டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், கட்சிக்குத் தலைமையேற்றிருந்த போது, பிகேஆர் ஒரு குடும்பக் கட்சி என அன்று கண்களுக்குத் தெரியவில்லையா? என்று கேள்வி கேட்கும் நபர்களை நோக்கி டத்தோஸ்ரீ அன்வார் பாய்ந்தார்.

1998 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நீதிக்கட்சியைத் தொடர்ந்து வழிநடத்தி, என்னிடம் ஒப்படைத்து, பெரும் பங்காற்றிய பிகேஆர் முன்னாள் தலைவரும், தனது துணைவியாருமான வான் அஸிஸாவிற்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இன்று பிகேஆர் மாநாட்டில் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

WATCH OUR LATEST NEWS