ஜோகூர் பாரு, மே.24-
பிகேஆர் கட்சியின் புதிய உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், இந்த வெற்றியானது, தம்முடைய தனிப்பட்ட வெற்றி அல்ல என்றும் இது மக்களின் நம்பிக்கையாகும். பொறுப்புடனும், நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் தாம் சுமக்க வேண்டிய பெரும் பொறுப்பாகும் என்றும் வர்ணித்துள்ளார்.
பிகேஆர் கட்சியின் இரண்டாவது உதவித் தலைவராக டத்தோஸ்ரீ ரமணன், தேர்வு செய்யப்பட்டு இருப்பது மூலம் மக்களின் குரலை ஓங்க செய்யவும், நீதியின் மதிப்புகளை நிலைநிறுத்தவும், நாட்டின் மாற்றத்தை, கட்சி தொடர்ந்து முன்னெடுப்பதை உறுதிச் செய்யவும் உறுதி பூண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மங்காத தேசிய சீர்திருத்தத்தை உள்ளடக்கிய மடானி மலேசியாவின் குரலை தேசிய அரங்கிற்குக் கொண்டு செல்வதே தனது நோக்கமும், தொலைநோக்குப் பார்வையும், உள்ளடக்கியிருப்பதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
மாநாட்டுக்குப் பிறகு பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையில் வலுவுடன் கட்சியை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுச் செல்வோம் என்று கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக டத்தோஸ்ரீ ரமணன் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.