பேராக், பகான் செராய், களும்பாங் தோட்ட ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடைபெற்றது

பகான் செராய், மே.24-

நாட்டில் மிக பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான 150 ஆண்டு கால வரலாற்றுச் சிறப்பைக் கொண்ட பேராக், பகான் செராய், களும்பாங் தோட்டத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை 7.30 மணியளவில் திருக்கல்யாண வைபோக நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

149 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி கடந்த மே 14 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய இந்நிகழ்வின் ஒரு பகுதியாக திருக்கல்யாண வைபோக நிகழ்வு நடைபெற்றது.

மேள தாள முழக்கத்துடன் மக்கள், மாங்கல்யம், சீர்வரிசை சுமந்து ஊர்வலமாக வந்து, சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு திருகல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

களும்பாங் தோட்ட ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயம் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதாகும். இந்த ஆலயத்தில் நடைபெறும் தீமிதி திருவிழா, மகாபாரதக் கதையை மையமாகக் கொண்டு நடைபெறும் பெருவிழாகும்.

பல அற்புதங்கள் நிறைந்த மகாபாரதக் காவியத்தை மையமாகக் கொண்டு, தீமிதி திருவிழாவின் போது 18 நாட்களுக்கு அந்த காவியக் கதையோடு, அதில் வரும் கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு நிகழ்ச்சியாக படைக்கப்பட்டு தோட்டத்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுவது பல ஆண்டுகளாக பொக்கிஷமாகக் காக்கப்பட்டு வரும் ஒரு பாரம்பரியமாகும் என்கிறார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரகதீஸ் பால சிங்கம்.

இந்த திருக்கல்யாண வைபோக நிகழ்விற்குச் சிறப்பு வருகை புரிந்த அரிமா மறுமலர்ச்சி இயக்கத் தலைவரும், தமிழ் மலர் நாளிதழின் இயக்குநருமான செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ். பா. தியாகராஜனுக்கு ஆலயக் காப்பாளர் ரெங்கசாமி தலைமையில் சிறப்பு செய்யப்பட்டது.

இந்த திருக்கல்யாணத்தைக் காண்பதற்கு மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ஓம்ஸ் தியாகராஜன் விவரித்தார்.

வரும் மே 31 ஆம் தேதி சனிக்கிழமை இந்த ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயத்தில் உற்சவத் திருவிழாவான தீமிதி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது.

WATCH OUR LATEST NEWS