கோல லங்காட், மே.26-
கார் ஒன்றினால் மோதப்பட்ட, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களான ஒரு வயது பெண் குழந்தை மற்றும் அக்குழந்தையின் பெற்றோர் உயிரிழந்தனர்.
மூவரைப் பலி கொண்ட இந்த விபத்து கடந்த சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பந்திங், ஜாலான் கிள்ளான்-பந்திங் சாலையில் 53 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
அந்தத் தம்பதியரும், குழந்தையும் பயணித்த மோட்டார் சைக்கிளைக் காரில் பயணித்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மோதித் தள்ளியதாகக் கூறப்படுகிறது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், எதிர்த்திசையில் நுழைந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை மோதித் தள்ளியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதில் குழந்தையும், 20 வயது மதிக்கத்தக்கத் தம்பதியரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி எறியப்பட்டதாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அக்மால்ரிஸால் ரட்ஸி தெரிவித்தார்.