பாஜம் தமிழ்ப்பள்ளிக்கு 70 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி

சிரம்பான், மே.26-

நெகிரி செம்பிலான், பாஜம் தமிழ்ப்பள்ளிக்கு 70 ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகையை சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் அங்கீகரித்துள்ளதாக நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜ. அருள் குமார் தெரிவித்தார்.

சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் தம்முடைய நீலாய் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அந்தோணி லோக்கும், தாமும் பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அருள் குமார், பாஜம் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு ஏற்ப 70 ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகையை அந்தோணி லோக், வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

பாஜம் தமிழ்ப்பள்ளியின் கணினிக் கூடத்தில் பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதற்காக பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் இந்த விண்ணப்பத்தை செய்து இருந்ததாக அருள் குமார் தெரிவித்தார்.

ஏஐ மற்றம் ஐசிடி போன்ற தொழில்நுட்பங்களின் வரவினால் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நமது மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். அதற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள நமது மாணவர்கள் தவறுவார்களேயானால் பின்னடைவை எதிர்நோக்குவார்கள். அதற்கு ஒரு போதும் வழிவிடக்கூடாது என்று அருள் குமார் நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS