ஷா ஆலாம், மே.26-
நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு லோஜிஸ்திக், தொழில்துறையினர் ஆற்றி வரும் பெரும் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
லோஜிஸ்திக் தொழில்துறையைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்துவதிலும், அதற்கான தீர்வுகளை ஏற்படுத்துவதிலும் அரசாங்கத்துடன் குறிப்பாக போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பல்ஸ் எனப்படும் தீபகற்ப மலேசிய லோஜிஸ்திக் நடத்துநர்கள் சங்கம் முக்கியப் பங்காற்ற முடியும் என்று அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.
லோஜிஸ்திக் தொழில்துறை என்பது வர்த்தகத்திற்கு முதுகெலும்பாக விளங்குகிறது. இது உற்பத்தியாளர்களுக்கும், பயனீட்டாளர்களுக்கும் இடையில் பொருட்களைத் திறம்பட நகர்த்த உதவுகிறது. ஒரு வலுவான லோஜிஸ்திக் சுற்றுச்சூழல் அமைப்பு மட்டுமே வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கிறது. உலகளாவியச் சங்கிலி ஒருங்கிணைப்பை வலுப்படுத்துகிறது.
அந்த வகையில் லோஜிஸ்டிக் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒருங்கிணைந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தீபகற்ப மலேசிய லோஜிஸ்திக் நடத்துநர்கள் சங்கமான பல்ஸ், லோஜிஸ்டிக் தொழில்துறையினர் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை, போக்குவரத்து அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்ற முடியும் என்று அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை, தீபகற்ப மலேசிய லோஜிஸ்திக் நடத்துநர்கள் சங்கமான பல்ஸ், ஷா ஆலம், புக்கிட் கெமுனிங் மாநாட்டு மையத்தில் ஏற்பாடு செய்த 2025 ஆம் ஆண்டுக்கான வர்த்தகத் தொடர்புத்துறை விருந்து நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.
போக்குவரத்து அமைச்சின் தொலைநோக்குப் பார்வை என்னவென்றால், லோஜிஸ்திக் நிறுவனங்கள், தங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துவதில் தீவிர ஈடுபாடு காட்ட எடுக்க வேண்டும் என்று அந்தோணி லோக் வலியுறுத்தினார்.
இதில் ICOP ( ஐகோப் ) எனப்படும் தொழில்துறை நடைமுறை விதிகளுக்கு இணங்குவதை உறுதிச் செய்வதற்காக உள் தணிக்கைகளை நடத்துவதும், அமலாக்கம் நிகழும் வரை காத்திருக்காமல் இருப்பதும் அடங்கும். இது லோஜிஸ்திக் தொழில் துறை வணிகத்தை மேம்படுத்த உதவும் என்று அந்தோணி லோக் தனது உரையில் தெரிவித்தார்.
சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் புவனேஷ் சுப்ரமணியம் முன்னிலையில் சங்கத்தின் உதவித் தலைவர் குகநாதன் கிருஷ்ணன் மேற்பார்வையில் நடந்த இந்த விருந்து நிகழ்வில், தீபகற்ப மலேசிய லோஜிஸ்திக் நடத்துநர்கள் சங்கத்தில், லோஜிஸ்திக் துறையில் உள்ளவர்கள் உறுப்பினர்களாக இணை வேண்டிய அவசியத்தைச் சங்கத்தின் துணைத் துணைத்தலைவர் ஜோஷுவா ரவி வலியுறுத்தினார்.
கிள்ளான் எம்.பி. வீ. கணபதிராவ், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் ஆகியோரின் சிறப்பு வருகையுடன் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்வில் நாடு தழுவிய நிலையில் உள்ள லோஜிஸ்டிக் தொழில்துறையினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.