பூச்சோங், மே.26-
தனது காதலியின் முன்னாள் கணவரால் ஆடவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மூவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் அந்தக் காதலியின் முன்னாள் கணவரும் அடங்குவர்.
பூச்சோங், தாமான் பூச்சோங் இந்தானில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 47 வயதுடைய நபர், கடும் வெட்டுக் காயங்களுக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தனது கணவருடன் பிரிந்து, அந்த ஆடவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் அந்தப் பெண் கொடுத்த தகவலின் பேரில் அவரின் முன்னாள் கணவர் மற்றும் இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக சுபாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் பைஃருஸ் ஜபார் தெரிவித்தார்.
தனது மனைவியை அந்த நபர் அபகரித்துக் கொண்டார் என்ற பொறாமையின் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்து இருப்பதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று பைஃருஸ் ஜபார் விளக்கினார்.