புதிய தேசிய ஒருமித்தக் கருத்து மூலம் இந்திய சமூகத்தை வலுப்படுத்துதல்

கோலாலம்பூர், மே.27-

ஒரு தலைவரின் மிகப் பெரிய நற்பண்பு பலவீனத்தை ஒப்புக் கொள்வதில் உள்ளது. குறிப்பாக அரசியலில், அத்தகையப் பணிவு அர்த்தமுள்ள சமூக மாற்றத்திற்கான அடித்தளத்தை உருவாக்குகிறது. குறைபாடுகளை ஒப்புக் கொள்வதும், ஏற்றுக் கொள்வதும் சிறந்த மலேசியாவை உருவாக்குவதற்கான துணிச்சல் மிகுந்த முதல் படிகட்டாகும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக் கட்சியான மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தேசியத் தலைவர் புனிதன் பரமசிவம் தெரிவித்தார்.

கடந்த வாரம் சிங்கப்பூரில் உள்ள ஐஏஇஏஎஸ் யூசோப் இஷாக் கழகத்தில் எதிர்க்கட்சித் தலைவரான டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் நிகழ்த்திய முக்கிய உரையில், அவர் முன் வைத்த புதிய தேசிய ஒருமித்தக் கருத்து, ஒரு துணிச்சலான முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று எம்ஐபிபியின் தலைவரான புனிதன் புகழாரம் சூட்டினார்.

டத்தோ ஶ்ரீ ஹம்ஸாவின் இந்த உரை, நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட விரிவான சீர்திருத்தத்தை உறுதியளிக்கும் ஒரு தொலைநோக்கு உறுதிமொழியாகும் என்று புனிதன் வர்ணித்தார்.

குறிப்பாக அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஆழமான வேரூன்றிய பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் மலேசியாவிற்கான ஒரு வியூகப் பார்வையை இது கோடிட்டுக் காட்டுகிறது என்று புனிதன் குறிப்பிட்டார்.

புதிய தேசிய ஒருமித்தக் கருத்து மூன்று முக்கியத் தூண்களில் நங்கூரமிடப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஹம்சா முன்மொழிந்தார். பகிரப்பட்ட இலக்குகள், பகிரப்பட்ட செழிப்பு மற்றும் மனித நேயமிக்க நிர்வாகம் – பழிவாங்கும் அரசியலை நிராகரித்தல், தேசிய உணர்வை மீண்டும் தூண்டுதல் மற்றும் இன மற்றும் கலாச்சார எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் டத்தோ ஶ்ரீ ஹம்ஸாவின் உரை அமைந்திருந்ததாக புனிதன் தெரிவித்தார்.

பெரிகாத்தான் நேஷனலின் உறுப்புக் கட்சியான கெராக்கான், பெர்சத்து மற்றும் பாஸ் ஆகியவற்றின் சகத் தலைவர்களுடன் எம்ஐபிபியின் தலைவர் என்ற முறையில் தாமும் சிங்கப்பூரில் ஓர் அர்த்தம் பொதித்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டது ஒரு பெரும் பேராகக் கருதுவதாக புனிதன் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர், சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர், பாதுகாப்பு மூத்த துணை அமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சுக்களின் பிற மூத்த அதிகாரிகளுடனும் உயர் மட்ட சந்திப்புகளில் கலந்து கொள்வதற்கு இந்த நிகழ்வு பெரும் வாய்ப்பை எம்ஐபிபி கட்சிக்கு வழங்கியதாக புனிதன் பெருமிதம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS