புதிய தேசிய ஒருமித்தக் கருத்திணக்கம் இந்திய சமூகத்தை வளப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு – எம்ஐபிபி

ஷா ஆலாம், மே.27-

புதிய தேசிய ஒருமித்தக் கருத்திணக்கத்தை உருவாக்கும் திட்டம், இந்திய சமூகத்தை மீண்டும் வளம் பெறச் செய்து, நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் விரிவான சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் என்று மலேசிய மக்கள் இந்திய கட்சியான எம்ஐபிபி தலைவர் புனிதன் பரமசிவம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் கடந்த வாரம் அறிவித்த இந்த யோசனை, மனித மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒற்றுமை, சமூக நீதி மற்றும் நிர்வாகத் திறனுக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தியாகும் என்ற புனிதன் குறிப்பிட்டார்.

உண்மையான தலைவர்கள் தங்கள் பலவீனங்களை ஒப்புக்கொண்டு, துணிந்து மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பவர்கள் என்று புனிதன் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட இந்த புதிய தேசிய ஒருமித்தக் கருத்து, பகிரப்பட்ட இலக்குகள், பகிரப்பட்ட செழிப்பு மற்றும் மனிதாபிமான நிர்வாகம் ஆகிய மூன்று முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இந்த அணுகுமுறை பழிவாங்கும் அரசியலை நிராகரிக்கிறது. தேசிய உணர்வை மீண்டும் உருவாக்குகிறது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கிறது என்று புனிதன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘இந்தியக் குழந்தைகள், நமது குழந்தைகள், சீனக் குழந்தைகள், நமது குழந்தைகள்’ போன்ற முழக்கங்களை மட்டும் உச்சரிப்பதில் சிறந்து விளங்கிய ஒரு சில அரசாங்கத் தலைவர்களின் செயல்களையும் அவர் விமர்சித்தார்.

மலேசியாவில் உள்ள இந்திய சமூகம் தொழில்நுட்ப மற்றும் உயர்க்கல்விக்கான அணுகல், வேலையின்மை விகிதங்கள், நகர்ப்புற வறுமை, சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தேசியக் கொள்கை செயல்பாட்டில் பங்கேற்பின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுடன் இன்னும் போராடுகிறது என்று புனிதன் விளக்கினார்.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள நமது உரிமைகளை நாம் அறிவோம். இருப்பினும், சமூக நீதியின் உண்மையான அர்த்தத்தைக் கொண்டு வரும் ஒருமைப்பாடு, சமூகவியல் நலன் ஆகியவற்றை உள்ளடக்கிய அம்சங்களை அமல்படுத்துவது மிகவும் முக்கியம் என்று புனிதன் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS