கோலாலம்பூர், மே.28-
தாம் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, இன்று தமது பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிகேஆர் கட்சியின் பேராளர்களின் ஆதரவுடன் முன்பு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டேன். அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சித் தேர்தலில் பேராளர்களின் ஆதரவை இழந்தேன்.
பேராளர்களின் ஆதரவை இழக்கக்கூடிய ஒருவர், அந்த கட்சி வழங்கிய அரசாங்கப் பதவியில் அமர்ந்து கொண்டு இருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. அது என் தன்மானத்தை உரசிப் பார்ப்பது போல் உள்ளது. பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கி விட்டேன். அலுவலகத்தைக் காலி செய்கிறேன் என்று ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.
தம்முடைய விடுமுறைக் காலம் ஜுன் 17 ஆம் தேதி வரை இருப்பதாக குறிப்பிட்ட ரஃபிஸி ரம்லி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.