ஜோகூர் பாரு, மே.28-
கடந்த வாரம் ஜோகூர் பாருவிலும், பொந்தியானிலும் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் இரண்டு கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
கடந்த மே 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜாலான் ஸ்கூடாய் லாமாவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையின் மூலம் 23 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பலதரப்பட்ட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்ட வேளையில் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூரைச் சேர்ந்த 6 ஆடவர்களும் வெளிநாட்டைச் சேர்ந்த இரு பெண்களும் பிடிபட்டதாக டத்தோ குமார் தெரிவித்தார்.
29 க்கும் 54 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எண்மரும் போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்கள் என்று நம்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.