அமைச்சரவையில் மாற்றம் செய்யத் திட்டமில்லை

புத்ராஜெயா, மே.29-

பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் இயற்கை வள மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தற்பொழுது சூழலில் அமைச்சரவையில் மாற்றம் செய்யத் திட்டம் இல்லை என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமர் துறை ஊழியர்களுடன் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில், “அவர்கள் தற்போது விடுப்பில் உள்ளனர். விடுப்பில் உள்ள அமைச்சர்களை மாற்ற முடியாது,” என அன்வார் தெரிவித்தார்.

ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மி, 2025 ஆம் ஆண்டு பிகேஆர் கட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தங்களது பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இருவரின் விடுப்புக் கோரிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கால நடவடிக்கைகள் பிரதமரால் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS