தமிழ் திரை உலகின் குணச்சித்திர நடிகர் ராஜேஷ் காலமானார். அவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 1949ஆம் ஆண்டு, தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த ராஜேஷ், பாலச்சந்தர் இயக்கத்தில் சுஜாதா, கமல்ஹாசன் நடித்த ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
1979 ஆம் ஆண்டு ‘கன்னி பருவத்திலேயே’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பதும், இந்த படத்தில் வில்லனாக பாக்யராஜ் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘அச்சமில்லை அச்சமில்லை’ உட்பட, பல திரைப்படங்களில் நடித்த அவர், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், இவர் ஒன்பது புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடைசியாக, விஜய் சேதுபதி நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், திடீரென அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவாக இருந்த நிலையில், திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து அவருடைய உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.