இளவரசி டயானாவின் பண்ணை வீடு தீக்கிரையானது

இங்கிலாந்து, மே.29-

மறைந்த இளவரசி டயானா வளர்ந்த அல்தார்ப் எஸ்டேட் வளாகத்தில் உள்ள பண்ணை வீடு தீயில் முற்றிலும் அழிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இங்கிலாந்தின் கிங்ஸ்டோர்பில் உள்ள மில் லேன் பகுதியில் நிகழ்ந்ததாக நார்தாம்ப்டன்ஷயர் தீயணைப்புச் சேவைத் துறை தெரிவித்துள்ளது. தீயைக் கட்டுப்படுத்த 4 தீயணைப்புக் குழுக்கள் இணைந்து செயல்பட்டன.

தீயில் கட்டடம் முழுவதுமாக எரிந்த நிலையில், இது திட்டமிட்டச் செயலாக இருக்கலாம் என டயானாவின் சகோதரரும், எஸ்டேட் உரிமையாளருமான ஏர்ல் சார்ல்ஸ் ஸ்பென்சர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.

தீயில் சிக்கிய பண்ணை வீடு, அல்தார்ப் ஹவுஸிலிருந்து சுமார் 5 மைல்கள் தொலைவில் உள்ளது. இந்த அல்தார்ப் எஸ்டேட்டில்தான் இளவரசி டயானா தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார். அதோடு, அதே வளாகத்தில்தான் அவரது நினைவிடமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS