கோலாலம்பூர், மே.29-
தற்போது தனது கவனம் தம்முடைய வணிகங்களிலும் நடப்பில் இருக்கும் சில திட்டங்களிலும் இருப்பதால், அரசியலுக்குத் திரும்புவதற்கோ அல்லது எந்தக் கட்சியிலும் இணைவதற்கோ உடனடித் திட்டமில்லை என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதி வரை அரசியலுக்குத் திரும்பும் எண்ணம் இல்லை என்றும், தான் தற்போது ஈடுபட்டு வரும் விவகாரங்களில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான கைரி, அரசியலுக்குத் திரும்புவார் என்ற ஊகங்கள் வெளியான நிலையில், அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். எந்தவோர் அரசியல் கட்சியிலிருந்தும் வாய்ப்புகள் கிடைத்ததா என்று கேட்கப்பட்டதற்கு, தற்போது தனது கவனம் தனது வணிகங்களில் இருப்பதாகவும், ஆண்டு இறுதிக்குப் பிறகு இது குறித்துப் பேசலாம் என்றும் அவர் பதிலளித்தார்.