மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த “தக்லைஃப்” திரைப்படம் அடுத்த வாரம் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், மணிரத்னம் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த செய்தி இப்போதே அவ்வப்போது கசிந்து வருகிறது.
முன்னதாக, முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் ஒரு காதல் படத்தை மணிரத்னம் இயக்கவிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அப்படி ஒரு படம் இயக்கும் எண்ணம் இருக்கிறது, ஆனால் அதற்கான நட்சத்திரங்கள் அமைய வேண்டும் என்று அண்மையில் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மணிரத்னம் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, “செக்கச்சிவந்த வானம்”, “தக்லைஃப்” ஆகிய மணிரத்னம் படங்களில் சிம்பு நடித்திருந்த நிலையில், மூன்றாவது முறையாக அவர் இணைய இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி, விஜய் சேதுபதி நடித்த “ஏஸ்” திரைப்படத்தில் நடித்த ருக்மணி வசந்தம் தான் இந்த படத்தின் நாயகி என்றும் பேசப்படுகிறது. இந்த படம் குறித்த பேச்சு வார்த்தைகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தெரிகிறது.