பெட்டாலிங் ஜெயா, மே.30-
மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் நுழைவதற்கு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கல்வித் தகுதி நிபந்தனையைக் கல்வி அமைச்சு திடீரென்று மாற்றம் செய்து இருப்பது குறித்து மசீச தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.
எஸ்பிஎம் தேர்வில் A தகுதியைப் பெற்ற மாணவர்கள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் நுழைவதற்குப் பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்றும், A+ மற்றும் A மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு திடீரென்று அறிவித்து இருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்று வீ கா சியோங் குறிப்பிட்டார்.
அரசாங்கக் கொள்கையில் குறிப்பாகக் கல்விக் கொள்கையில் திடீரென்று இந்த மாற்றம் செய்யப்படுவதற்குக் காரணம் என்ன, இந்த மாற்றம் உண்மையானால் பெரும் ஏமாற்றமாகும் என்று வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையின்படி 2025 – 2026 கல்வியாண்டில் A-யின்றி A+ மற்றும் A அடிப்படையில் 10 A பெற்ற மாணவர்கள் மட்டுமே மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இயல்பாகவே நுழைவதற்குத் தகுதி பெறுவார்கள் என்றும் இதனைத் துணைக் கல்வி அமைச்சர் வொங் கா வோ உறுதிப்படுத்தியதையும் வீ கா சியோங் சுட்டிக் காட்டினார்.
ஆனால் எஸ்பிஎம் தேர்வில் 10A பெற்ற மாணவர்கள் அனைவருமே மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் நுழைவதற்குத் தகுதி பெறுகின்றனர் என்று பிரதமர் அண்மையில் அறிவித்து இருப்பதையும் வீ கா சியோங் நினைவு கூர்ந்தார்.