ஷா ஆலாம், மே.30-
நாட்டின் பிரதானத் தொடர்புத்துறைச் சேவை முறையை கீழறுப்புச் செய்து நிலைக்குத்த வைத்ததாக நம்பப்படும் கேபல் திருடும் கும்பலைச் சேர்ந்த 13 பேருக்கு எதிராக சொஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் தெரிவித்துள்ளார்.
அந்த 13 பேருக்கு எதிரானத் தடுப்புக் காவல், சொஸ்மாவின் கீழ் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கேபள் திருடும் கும்பலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஓப் லூசூ மூலியா தேடுதல் நடவடிக்கையில் 13 பேரும் பிடிபட்டுள்ளனர்.
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் தொடர்புத்துறைச் சேவை முறையை நிலைக்குத்தச் செய்யும் வகையில் இவர்கள் இந்த கேபள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு இருப்பதால் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கானப் பாதுகாப்புச் சட்டமான சொஸ்மா, அவர்களுக்கு எதிராகப் பாய்ந்துள்ளது என்று டத்தோ ஹூசேன் ஓமார் குறிப்பிட்டார்.