கோலாலம்பூர், மே.31-
ஜப்பான், தோக்யோவில் நடைபெற்று வரும் 30ஆவது நிக்கேய் அனைத்துலக ஆய்வரங்கம், தாம் கலந்து கொள்ளும் கடைசி ஆய்வரங்கமாக இருக்கலாம் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கோடி காட்டியுள்ளார்.
மலேசியாவின் பிரதமராகத் தாம் இருந்த போது, 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் தலைநகர் தோக்யோவில் இந்த நிக்கேய் ஆய்வரங்க மாநாடு அறிமுகப்படுத்தப்பட்டு, தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு நிக்கேய் ஆய்வரங்கிலும் தவறாமல் கலந்து கொண்டு வந்த தாம், அடுத்த மாதம் 100 வயது எட்டும் நிலையில் நிக்கேய் ஆய்வரங்கில் தாம் கலந்து கொள்வது இதுவே கடைசியாக இருக்கலாம் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
ஆசியாவின் வருங்காலம் என்ற தலைப்பில் 30 ஆவது நிக்கேய் அனைத்துலக ஆய்வரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வரங்கில் துன் மகாதீர் கலந்து கொண்டுள்ளார்.
கோவிட் 19 பெரும் தொற்று ஏற்பட்டு இருந்த காலத்தில் 3 ஆண்டுகள் இந்த ஆய்வரைங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டாலும் மற்ற அனைத்து நிக்கேய் ஆய்வரங்கிலும் தாம் கலந்து கொண்டதாக துன் மகாதீர் நினைவு கூர்ந்தார்.
எனினும் ஒவ்வொரு மாநாட்டிலும் கலந்து கொண்டு ஆசியாவின் எதிர்காலம் குறித்துத் தாம் பேசுவதற்கும், கருத்துக்களை முன் வைப்பதற்கும் இந்த நிக்கேய் ஆய்வரைங்கைத் தாம் ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொண்டதற்கு துன் மகாதீர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.