தெங்கு ஸாஃப்ருலை ஓர் உறுப்பினராக பிகேஆர் ஏற்றுக் கொள்வது ஏற்புடையச் செயல் அல்ல

கோலாலம்பூர், மே.31-

அம்னோவிலிருந்து விலகி, பிகேஆர் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ள முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸை ஓர் உறுப்பினராக பிகேஆர் ஏற்றுக் கொள்வது, ஏற்புடையச் செயல் அல்ல என்று அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் விருப்பம் போல் கட்சி விட்டு கட்சிப் பாய்வதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது, ஏற்றுக் கொள்ளவும் கூடாது என்று அஷ்ராஃப் வஜ்டி குறிப்பிட்டார்.

மேலும் அம்னோவிலிருந்து விலகி விட்டதாக தெங்கு ஸாஃப்ருல் அறிவித்த போதிலும், அவரின் விலகல் கடிதத்தை அம்னோ இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பெறவில்லை என்பதையும் அஷ்ராஃப் வஜ்டி தெளிவுபடுத்தினார்.

சிலாங்கூர் கோத்தா ராஜா அம்னோ தொகுதியின் தலைவருமான தெங்கு ஸாஃப்ருல், பிகேஆர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்து இருப்பதை அம்னோ கடுமையாகக் கருதுவதாக அஷ்ராஃப் வஜ்டி குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி விட்டு கட்சித் தாவுவதைத் தடை செய்து இருக்கிறோம். அதே போல், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளும் தங்கள் உறுப்பினர்கள், உறுப்புக் கட்சிகளுக்குத் தாவுவதைத் தடை செய்ய வேண்டும். அதனை அனுமதிக்கக்கூடாது, அந்த நபரை உறுப்பினராக ஏற்றுக் கொள்ளவு கூடாது என்று பிகேஆர் கட்சிக்கு அஷ்ராஃப் வஜ்டி அறிவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS