தெங்கு ஸாஃப்ருல், சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமிக்கப்படலாம்

ஷா ஆலாம், மே.31-

தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ், அம்னோவிலிருந்து விலகி, பிகேஆரில் இணைவதற்கு முன் வந்து இருப்பது, அவர் சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்படலாம் என்று ஆருடம் வலுத்து வருகிறது.

இவ்வாண்டு தனது செனட்டர் பதவிக் காலம் முடிவுறும் நிலையில், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழிலியல் துறை அமைச்சர் பதவியைத் தொடர்ந்து வகிக்க முடியாத நிலைக்கு, தெங்கு ஸாஃப்ருல் தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தெங்கு ஸாஃப்ருலை, சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராகக் கொண்டு வரும் நோக்கிலேயே அவர் அம்னோவை விட்டு விலகி, பிகேஆர் கட்சிக்குக் கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

சிலாங்கூர் மாநிலத்தின் நடப்பு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, நடந்து முடிந்த பிகேஆர் தேர்தலில் தனது உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொண்டு இருப்பதால் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரான அவரை, மத்திய அமைச்சராகக் கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருகிறது.

எனினும் ஒரு பொருளாதார நிபுணரான தெங்கு ஸாஃப்ருலை, சிலாங்கூர் மந்திரி பெசராகக் கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருவதாகக் கூறப்படுவதை அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.

மேலும் தெங்கு ஸாஃப்ருல் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்ல என்றும் அமிருடின் ஷாரி வாதிடுகிறார். எனினும் சட்டமன்ற இடைத் தேர்தலின் மூலம் தெங்கு ஸாஃப்ருலை வெற்றி பெறச் செய்து, அவரை மந்திரி பெசாராகக் கொண்டு வருவதற்காகவே தற்போது காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

காரணம், சிலாங்கூர் மாநிலத்தில் மந்திரி பதவிக்கானக் கோட்டா என்பது, பிகேஆர் கட்சிக்குச் சொந்தமானதாகும்.

WATCH OUR LATEST NEWS