புதுடெல்லி, மே.31-
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 511 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவி வருவதால், மாவட்ட சுகாதார அதிகாரிகள், தினமும் பாதிக்கப்படுவோர் குறித்த தரவுகளைச் சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பை உறுதிச் செய்ய வேண்டும். போதிய எண்ணிக்கையில் படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேருக்கும் , மஹாராஷ்டிராவில் 424 பேருக்கும் , டில்லியில் 294 பேருக்கும், குஜராத்தில் 223 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தலா 148 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.